செய்திகள்
பிபின் ராவத்

சீனா, பாகிஸ்தானில் இருந்து தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது: பிபின் ராவத்

Published On 2020-11-06 15:27 GMT   |   Update On 2020-11-06 15:27 GMT
சீனா மற்றும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆபத்து நிலவுவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இந்தியா, சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனை நீடிக்கிறது. ஜூன் மாதம் லடாக்கில் இருதரப்பு ராணுவங்களும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லையை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் தற்போது சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல நாடுகளுடனும் ஆதிக்க மனப்பான்மையுடன் சீனா செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு எதிராக கைகோர்த்துள்ளன. அதேசமயம் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைர விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அங்கு பிபின் ராவத் பேசியதாவது:

லடாக் நிலைமை பதட்டமானது. அங்கு நாம் தந்த உறுதியான மற்றும் வலுவான பதிலடியினால் சீன ராணுவம் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொண்டது. சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது. பிராந்திய அளவில் உறுதியற்ற தன்மை நிலவும்போது அவர்கள் இணைந்து செயல்படுவது ஆபத்தானது.

எல்லை மோதல்கள், வரம்பு மீறல்கள், நேரடியாக மோதாமல் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறு பிபின் ராவத் பேசினார்.
Tags:    

Similar News