இந்தியா
படகு ஆம்புலன்ஸ்

ஒடிசாவின் பலிமேலா நீர்த்தேக்கத்தில் படகு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது பி.எஸ்.எப்.

Published On 2022-01-26 12:53 GMT   |   Update On 2022-01-26 12:53 GMT
நீர்த்தேக்கத்திற்கு அருகே போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதியில் உள்ள 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000 பேர் இந்த ஆம்புலன்ஸ் மூலம் பயனடைவார்கள்.
மால்கங்கிரி:

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள பலிமேலா நீர்த்தேக்கத்தில் படகு ஆம்புலன்ஸ் சேவையை எல்லைப் பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது. ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில் குருப்பிரியா பாலத்தின் அருகே, படகு ஆம்புலன்ஸ் சேவையை எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி சஞ்சய் சிங் தொடங்கி வைத்தார். இந்த ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 10,000 மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்க முடியும்.

எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் பங்கஜ் குமார் சிங், அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த மக்கள் சித்ரகொண்டாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கு, நீர்த்தேக்கத்தைக் கடக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்வதை அறிந்து, அவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்ததாக டிஐஜி குறிப்பிட்டார். 

நீர்த்தேக்கத்தின் இரு கரைகளுக்கு இடையில் படகு அம்புலன்ஸ் சேவை வழங்கப்படும். நீர்த்தேக்கத்திற்கு அருகே போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதியில் உள்ள 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000 பேர் இந்த ஆம்புலன்ஸ் மூலம் பயனடைவார்கள்.

மாநில அரசு குரிபிரியா பாலத்தை திறந்தபோதிலும், பிரதான சாலைக்கு வருவதற்கு சாலைகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள் ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியாமல் தவிக்கின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை வனப் பகுதி வழியாக மூங்கில் ஸ்டிரெச்சர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு சுமந்து செல்வது வழக்கம். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News