தமிழ்நாடு
அண்ணாசாலை 17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை அண்ணாசாலை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை அண்ணா சாலையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 3-ந் தேதி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக அவரது பெற்றோர் அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
விசாரணையில் அண்ணா சாலை பகுதியில் வசிக்கும் விக்னேஷ் (வயது 18) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விக்னேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பெசன்ட் நகரில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு திருவல்லிக்கேணி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விக்னேசை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.