செய்திகள்
அமித்ஷா

உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தார்

Published On 2019-08-10 17:09 GMT   |   Update On 2019-08-10 17:09 GMT
துணை ஜனாதிபதி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.
சென்னை:

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு இன்று சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்துறை மந்திரிஅமித்ஷா இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் தங்கிய அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அமித்ஷா வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News