செய்திகள்

ஓசூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி

Published On 2018-05-09 17:44 GMT   |   Update On 2018-05-09 17:44 GMT
ஓசூர் அருகே சோதனைச்சாவடியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஓசூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு காரில் பெங்களூரு நோக்கி சென்றார். காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

இன்று காலை 5 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே, ஆப்பிள் பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களுரு நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, சோதனைச்சாவடியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, சீனிவாசன் சென்ற கார், வேகமாக கண்டெய்னர் லாரி பின்புறம் மோதி விட்டது.

இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், டிரைவர் சுரேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். காரில் இருந்த 1 வயது பெண் குழந்தை, பலத்த அடிபட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக இறந்தது.

மேலும் காரில் பயணம் செய்த லலிதா மற்றும் சுவாதிஸ்ரீ ஆகிய 2 பெண்கள் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, ஒசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News