செய்திகள்
பிரமோஸ் ஏவுகணை சோதனை

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Published On 2019-10-23 06:39 GMT   |   Update On 2019-10-23 06:39 GMT
பிரமோஸ் ஏவுகணை சோதனை முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகள் 300 கி.மீ தொலைதூரத்துக்கு சென்று தாக்கும் திறன் படைத்தது.

பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்து மட்டுமின்றி கப்பல், விமானம், நீர்மூழ்கி கப்பல் மற்றும் நகரும் வாகனங்களில் இருந்து வெற்றிகரமாக செலுத்த முடியும்.

இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படையும், கடற்படையும் அடிக்கடி சோதனை நடத்தி வருவது வழக்கமாகும். இத்தகைய சோதனை ஒன்று நேற்று அந்தமான் நிக்கோபாரில் உள்ள டிராக் தீவில் நடத்தப்பட்டது.

இந்திய விமானப்படை இந்த சோதனையை மேற்கொண்டது. நேற்றும், நேற்று முன்தினமும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. நேற்று நகரும் வாகனத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

அந்த ஏவுகணை சோதனை முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

பிரமோஸ் ஏவுகணைகள் தலா 2.5 டன் எடை கொண்டவை. அதிக அளவு வெடிபொருட்களை தாங்கி செல்லும் இந்த ஏவுகணைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News