உள்ளூர் செய்திகள்
உடுமலை ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பொதுமக்களின் உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்கள்.

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் - உடுமலை தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

Published On 2021-12-02 07:16 GMT   |   Update On 2021-12-02 07:16 GMT
தமிழக அரசு தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை இயக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக உடுமலை ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில் வனத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

இதில் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறை யினரும், சின்னாறு சோதனைச் சாவடியில் அமராவதி வனத்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள உடுமலை சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுகாதாரத் துறையினர் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் உடலில் அதிகமாக வெப்பம் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

அத்துடன் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வனத்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே உடுமலையில் இருந்தும், கோவையில் இருந்து உடுமலை வழியாகவும் கேரள மாநிலம் மூணாறுக்கு பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பஸ்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

அதன்படி உடுமலையில் இருந்து மூணாறுக்கும், கோவையில் இருந்து உடுமலை வழியாக மூணாறுக்கும் இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூணாறுக்கு இயக்கப்படாமல் இருந்தது.

தற்போது தமிழக அரசு தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை இயக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழக பஸ் தினமும் காலை 6.30 மணிக்கு உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு மூணாறுக்கு இயக்கப்படுகிறது. 

பின்னர் அங்கிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு வந்து, அங்கிருந்து பழனிக்கு இயக்கப்படுகிறது. இதேபோன்று கோவையில் இருந்தும் உடுமலை வழியாக மூணாறுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News