செய்திகள்
காங்கோ: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
காங்கோவிற்கு அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் இருநாட்டிலும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவை காங்கோ அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டுப்படையுடன் இணைந்து ஐநா படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பேனி நகரில் உள்ள ஒவ்ஷா பகுதியில் இன்று நுழைந்த ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஐநா படையினர் தங்களை பாதுகாக்க வேண்டுமேன பொதுமக்கள் பேனி நகரில் உள்ள ஐநா அலுவலகம் அருகே நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.