லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் ஏ.சியை பயன்படுத்தும் போது

கோடை காலத்தில் ஏ.சியை பயன்படுத்தும் போது

Published On 2021-04-28 05:30 GMT   |   Update On 2021-04-28 05:30 GMT
ஏ.சியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் வெப்பநிலையை ஒரே அளவில்தான் பராமரிக்க வேண்டும். ஏ.சியை அதன் இயல்பு வெப்பநிலையில் தேர்வு செய்தால் 24 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.
கோடை காலத்தில் நிறைய வீடுகளில் ஏ.சி மற்றும் ஏர் கூலர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலும், குளிர்சாதன பெட்டிகளின் பயன்பாடு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. அறைக்குள் நிலவும் வெப்பத்தை விரட்டுவதற்காக நிறைய பேர் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து அதிக குளிர்ச்சி தன்மையை வரவழைக்கவும் செய்கிறார்கள்.

அதனால் அறையும், உடலும் குளிர்ச்சி பெற்றாலும் கூடவே ஆபத்தையும் வரவழைத்து விடும். கொரோனா வைரசுக்கு குளிர்ச்சி சூழல் சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. அதனால் குளிர்சாதன பெட்டிகளின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். குளிர்சாதனங்களின் வெப்பநிலையை இயல்பு நிலையில் பராமரிப்பது மின் கட்டண செலவையும் குறைக்க உதவும். உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் வழிவகை செய்யும். குளிர்சாதனங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏ.சி. உற்பத்தியாளர்கள் குளிர்சாதனங்களின் இயல்பு வெப்பநிலையை 24 டிகிரி செல்சியல் அளவில் வைத்திருக்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இயல்பு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.

20 டிகிரி வெப்பநிலையில் இருந்து 24 டிகிரி வெப்பநிலையை உயர்த்தும்போது ஒவ்வொரு டிகிரிக்கும் சுமார் 6 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏ.சியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் வெப்பநிலையை ஒரே அளவில்தான் பராமரிக்க வேண்டும். ஏ.சியை அதன் இயல்பு வெப்பநிலையில் தேர்வு செய்தால் 24 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.

டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதனால் ஏ.சி.யை 10 டிகிரி குறைவாக வைப்பது சிறப்பானது. ஏனெனில் உடலின் வெப்பநிலை சராசரியாக 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதற்கும் குறைவான வெப்பநிலை நிலவும் அறைகளில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை நிலவும். ஏ.சியை இயல்பு வெப்பநிலையில் இருந்து குளிர்ச்சிக்காக குறைக்கும் ஒவ்வொரு டிகிரிக்கும் 6 சதவீதம் அதிக மின்சாரம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆதலால் ஏ.சியை 18 டிகிரி வெப்பநிலைக்கு குறைப்பதற்கு பதிலாக 23-24 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றிவிடுவது பலன் தரும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் இந்த வெப்பநிலை கூட நன்றாக இருப்பதை மனம் ஏற்றுக்கொண்டுவிடும்.

குளிர்சானங்களை உபயோகிக்கும்போதெல்லாம் அறையின் கதவுகள், ஜன்னல்கள் இறுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறாது. ஜன்னல்களில் திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். அது சூரிய வெப்பம் அறைக்குள் நுழைவதை தடுத்துநிறுத்திவிடும்.

பிரிட்ஜ், டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் அதிக வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டவை. அதனால் குளிர்சாதன பெட்டி, ஏர்கூலரை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை அணைத்துவிடுவது நல்லது. அறைக்குள் குளிர்ச்சி நிலவிய பிறகு அவற்றை மீண்டும் ஆன் செய்துவிடலாம்.

உடல் குளிர்ச்சியில் நடுங்கும் வரை ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது. இரண்டு மணி நேரம் உபயோகித்துவிட்டு பிறகு அணைத்துவிடலாம். பின்னர் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் உபயோகிக்கலாம். அது அறைக்குள் போதுமான வெப்பநிலை நிலவுவதற்கு வழிவகை செய்யும். மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

ஏ.சி.யை ஆன் செய்ததும் நிறைய பேர் மின் விசிறியை அணைத்துவிடுவார்கள். மின் விசிறி யையும் உபயோகிக்கும்போது குளிர்ந்த காற்று அறையின் மூலைமுடுக்கெல்லாம் சட்டென்று பரவிவிடும். அறையும் விரைவாகவே காற்றோட்டமான சூழலுக்கு மாறிவிடும். குளிர்ச்சி நிலவ தொடங்கியதும் மின்விசிறியை அணைத்துவிடலாம். அறையில் உள்ள சூடான காற்றும் வெளியேறிவிடும்.

ஏ.சி.யின் துவாரங்கள், உள்பகுதிகளுக்குள் படர்ந்திருக்கும் அழுக்குகளை குறிப்பிட்ட இடைவெளியில் அப்புறப்படுத்த வேண்டும். அது குளிர்ந்த காற்று வெளிப்படுவதற்கும் இடையூறாக அமையும். அவற்றை அகற்றுவதன் மூலம் ஏ.சி.யின் பயன்பாடு 5 முதல் 15 சதவீதம் குறையும்.
Tags:    

Similar News