செய்திகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ரீம் கோர்ட்
கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
- கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
- இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீங்கியது.
புதுடெல்லி:
கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பாரதிய ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்தன. மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.
14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி செய்த பிறகு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து ஜூலை 23-ந்தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
கூட்டணி கட்சியைச் சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால் குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்றது.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அவர்கள் அனைவரும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முகுல் ரோத்தகியும், காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபிலும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ராஜீவ் தாவனும் ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்தனர்.
கடைசியாக கடந்த மாதம் 25-ந்தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவை காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள விஷயங்களை கவனத்தில் கொள்வதாக அறிவித்தனர்.
இதற்கிடையே சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 9-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
சபாநாயகர் முடிவில் சுப்ரீம்கோர்ட்டு தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதே நேரத்தில் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானது அல்ல. இது சட்ட விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. எம்.எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்துக் கொண்ட கால அளவு தவறானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதன்படி இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீங்கியது.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-
1. முனிரத்னா (ராஜ ராஜேஸ்வரிநகர் தொகுதி)
2. பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்)
3. ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்)
4. எஸ்.டி.சோம சேகர் (யஷ்வந்தபுரம்)
5. கோபாலய்யா (மகா லட்சுமி லேஅவுட்)
6. பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி)
7. ஸ்ரீமந்த்பட்டீல் (காக் வாட்)
8. ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்)
9. மகேஷ் குமடள்ளி (அதானி)
10. பி.சி.பட்டீல் (இரேகூர்)
11. நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை)
12. எச்.விஸ்வநாத்(உன்சூர்)
13. சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்)
14. சங்கர் (ராணி பென் னூர்)
15. ஆனந்த்சிங் (விஜயநகர்)
16. எம்.டி.பி. நாகராஜ் (ஒசக்கோட்டை)
17. சுதாகர் (சிக்பள்ளாப்பூர்).