செய்திகள்
தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயர் ஆனந்தன்

ஆன்லைனில் ரம்மி விளையாடிய சென்னை ஐ.டி. என்ஜினீயர் தற்கொலை

Published On 2021-10-10 07:21 GMT   |   Update On 2021-10-10 07:21 GMT
வாணியம்பாடியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சத்தை இழந்த ஐடி என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் விவசாயி. இவரது மகன் ஆனந்தன் (வயது31). சென்னை ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்தார்.

ஆனந்தன் ஆன்லைன் மூலம் செல்போனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். முதலில் அவருக்கு இதில் அதிகளவில் பணம் வந்தது.

இதனால் அதிக ஆசையில் தொடர்ந்து அவர் ரம்மி விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானார்.

அவரது பெற்றோர் கண்டித்தும் ரம்மி விளையாடுவதை ஆனந்தனால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து இரவு பகல் என்று பாராமல் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தார். எப்போதும் அவர் செல்போனுடன் தான் இருப்பார். சம்பள பணத்தையும் அவர் வீட்டுக்கு வழங்காமல் ரம்மி விளையாடியே வந்துள்ளார். தொடக்கத்தில் அவருக்கு ரம்மி விளையாட்டில் ஏராளமான பணம் கிடைத்தாலும் அதற்கு பின்னர் ஏராளமான பணத்தை இழந்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் அவரது நண்பர்களிடமும் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்த வகையில் அவருக்கு ரூ.6 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக ஆனந்தன் சொந்த ஊரான புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லைக்கு வந்தார். வாக்களித்து விட்டு நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அவரது பெற்றோருக்கு ஆனந்தன் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் ரூ.10 லட்சம் இழந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆனந்தனை கண்டித்தனர். இனி ஆன்லைனில் ரம்மி விளையாட கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர் அறைக் கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். ஜன்னல் வழியாக பார்த்த போது ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News