செய்திகள்
வைரலாகும் இந்தியாவின் புதிய வரைபடம்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் புதிய வரைபடம் என கூறி பல்வேறு வரைபடங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் சட்டப்பிரிவு 370 இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்திய சர்வே ஜெனரல் அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியாவிற்கான புதிய வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அன்று முதல் ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இந்திய வரைபடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெரும்பாலும் இதுபோன்ற வரைபடங்கள், "புதிய இந்தியாவின் புதிய வரைபடம், சிறப்பான இந்தியா" என்ற வாக்கில் தலைப்பிடப்பட்டு இருக்கின்றன. இந்த வரைபடங்களில் ஜம்மு காஷ்மீரில் சம அளவில் இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பது போன்று வரையப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ வரைபடமும், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வரைபடமும் வித்தியாசமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வைரல் வரைபடத்தில் 'copyright 2019 www.mapsofindia.com' என எழுதப்பட்டு இருக்கிறது. பலர் இது உண்மையென நம்பி பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வைரலாக பரவி வரும் வரைபடம் போலி என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.