செய்திகள்
திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு பேனர்
கொரோனா வதந்திகளை தடுக்க திருப்பூர் நகரம் முழுவதும் பொது இடங்களில் பேனர் அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
திருப்பூர்:
கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வதந்திகள் பரவாமல் தடுக்கும் வகையிலும் திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் நகரம் முழுவதும் விழிப்புணர்வு வாசகம் கொண்ட பேனர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைள், ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், வீடுகளில் தனிமைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து இவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பயப்பட வேண்டாம்‘ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் உள்ள வாசகங்கள், கொரோனா பாதித்தால் பதட்டமடைய வேண்டாம். ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் வரும் நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்.வெளிநாடு சென்று திரும்பியிருந்தாலும் சென்று வந்தவரிடம் தொடர்பில் இருந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. உங்கள் உடல் நலம் காப்பது தான் நோக்கம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.