செய்திகள்
திட்டமிட்டு பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற கொடூரம்- ஐதராபாத்தில் வலுக்கும் போராட்டம்
தெலுங்கானாவில் தனியாக சென்ற பெண் டாக்டரை திட்டமிட்டு கற்பழித்து கொலை செய்த காமுகர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
நகரி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்தார்கள். மேலும் பிரியங்காரெட்டி தனது தங்கையிடம் சில லாரி டிரைவர்கள் தனக்கு உதவுவதாக தெரிவித்ததை வைத்தும் விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவான லாரி எண்களை அடிப்படையாக வைத்து லாரி டிரைவர் முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரியங்கா ரெட்டியை திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்தது.
பிரியங்கா ரெட்டி டோல்கேட் அருகே தனது பைக்கை நிறுத்துவதை அங்குள்ள லாரி டிரைவர் மற்றும் கிளீனர் பார்த்துள்ளனர். அப்போது அவரது பைக் டயரை பஞ்சராக்கி விடுவது என்றும், இரவு நேரத்தில் பஞ்சரை சரி செய்ய உதவுவதுபோல் நடித்து அவரை கடத்தி சென்று கற்பழிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தை நவீன் தெரிவித்துள்ளான். இதையடுத்து 4 பேரும் பிரியங்கா ரெட்டியின் பைக் டயரை பஞ்சராக்கி உள்ளனர். இரவில் இருந்து இரவு வீடு திரும்பிய போது டயர் பஞ்சரானதால் பிரியங்கா ரெட்டி தவித்துள்ளார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் என்ன செய்வது என்று பயந்துள்ளார். அப்பொழுது அவரிடம் 4 பேரும் தாங்கள் பஞ்சர் செய்ய உதவுவதாக கூறி உள்ளனர். இப்பகுதியில் கடைகள் இல்லாததால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று கூறி உள்ளனர். இதில் சிவா பைக்கை பஞ்சர் போட்டு தருவதாக கூறி கடைக்கு எடுத்துச் சென்றுள்ளான்.
அப்போது திடீரென்று 3 பேரும் பிரியங்கா ரெட்டியை வாயை பொத்தி தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் திரும்பி வந்த சிவாவும் பிரியங்கா ரெட்டியை கற்பழித்துள்ளார்.
அப்பொழுது பிரியங்கா ரெட்டி உதவி கேட்டு கத்தினார். இதனால் பயந்து போன அவர்கள் பிரியங்காவின் வாயை பொத்தி உள்ளனர். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பி விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த கொடூரம் நடந்திருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.