செய்திகள்
கோப்புபடம்

மண் வளமாக இருந்தால் விளைபொருட்கள் தரமாக இருக்கும் - வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2021-11-23 07:50 GMT   |   Update On 2021-11-23 07:50 GMT
அதிக உணவு உற்பத்திக்கு அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மண் வளமாக இருந்தால் விளை பொருட்கள் தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும் என பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவி பேராசிரியர் தேன்மொழி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

நாடு சுதந்திரம் பெறும் முன் இயற்கை உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தினர். சுதந்திரத்திற்கு பின் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம் குறைய துவங்கியது. நில மேலாண்மை என்பது மண், பயிர், ரகம் தட்பவெப்பநிலை, சுற்றுச்சூழல், நீர்வளம் ஆகிய ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் அடங்கியதாகும். உலகின் இயற்கை ஆதாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மண் வளம் ஆகும். 

அதிக உணவு உற்பத்திக்கு அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சூழல் பாதிக்காத வகையில் நீடித்த நிலையான வேளாண்மை கிடைத்திட மண் வளம் சார்ந்த வேளாண்மை அவசியம். மண் வளமாக இருந்தால் விளை பொருட்கள் தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும். விளைபொருட்களை உண்ணும் மனித சமுதாயமும் வளமாக இருக்கும்.

மண் வளம் மேம்பட மண்ணின் அங்கக கரிம அளவை அதிகரித்தல், மண் ஆய்வு செய்து சமச்சீர் உரமிடல், உயிர் உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரம் இடுதல், ஒருங்கிணைந்த உரம், ஊடுபயிர்கள், பயிர் சுழற்சி முறை மண் அரிப்பை தடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News