நெல்லையில் பெண் சரமாரி குத்திக்கொலை- மகள்களிடம் போலீசார் விசாரணை
நெல்லை:
நெல்லை கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனி
சிதம்பர நகரை சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மனைவி உஷா (வயது 50).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் என்ஜினீயரிங் படித்துள்ளார். இளைய மகள் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது 2 மகள்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை உஷா வீட்டில் வைத்து கவனித்து வந்தார். இதுதொடர்பான பிரச்சினையில் கோவில் பிச்சை வெளியூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
உஷாவின் வீடு இன்று காலை வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. வாசலில் இருந்த பால் பாக்கெட்டையும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் உஷா பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு உஷா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
வீட்டின் மற்றொரு அறையில் அவரது 2 மகள்களும் ரத்தக்கறையுடன் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.