செய்திகள்
மத்திய அரசு

தடுப்பூசி சாதனையின் பின்னால் கிராமப்புற மக்கள் - மத்திய அரசு தகவல்

Published On 2021-06-22 23:13 GMT   |   Update On 2021-06-22 23:13 GMT
ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போட்டு நிகழ்த்திய சாதனையின் பின்னால் கிராமப்புற மக்கள் இருப்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதலில் தடுப்பூசியின் மீது மக்கள் தயக்கம் காட்டினாலும், இப்போது கொரோனாவுக்கு எதிரான ஒரே வலிமையான ஆயுதம் தடுப்பூசிதான் என புரிந்து கொண்டு, அதை செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 88.09 டோஸ் தடுப்பூசி போடப்பட்டன. இது உலக சாதனையாக அமைந்துள்ளது.

இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:-



21-ந் தேதி ஒரே நாளில் தடுப்பூசியில் வரலாற்று மைல் கல்லாக 88.09 லட்சம் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னால் கிராமப்புற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் 63.68 சதவீதம் பேர் இந்த சாதனையின்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நகர்ப்புற மக்கள் 36.32 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

21-ந் தேதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் என்று பார்த்தால் மத்திய பிரதேசம் முதல் இடம். அதைத் தொடர்ந்து கர்நாடகம், உத்தரபிரதேசம், பீகார், அரியானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மராட்டியம், அசாம் மாநில மக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இன்று (நேற்று) பகல் 3 மணி வரையில் 29.16 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. அனாலும், கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

மே 7-ல் உச்சம் தொட்ட பின்னர் கிட்டத்தட்ட 90 சதவீத பாதிப்பு குறைந்து விட்டது.

இதுவரை நாட்டில் 22 பேருக்கு புதிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம், ரத்னகிரியிலும், ஜல்கானிலும் இந்த வைரஸ் பாதிப்பு 16 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 6 பேர் மத்திய பிரதேசத்திலும், கேரளாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News