உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட காட்சி.

திருப்பூரில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-01-11 09:27 GMT   |   Update On 2022-01-11 09:27 GMT
ஒவ்வொரு ஆண்டும் பனியன் தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள்  உள்ளன. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பனியன் தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற 13-ந்தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல், 15-ந்தேதி மாட்டுப்பொங்கல், 16-ந்தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து வருகிற 14-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது

வருகிற 17, 18-ந் தேதிகளில் பஞ்சு, நூல் விலையை கண்டித்து பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அனைத்து தொழில் அமைப்புகளும் உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்க உள்ளன. 

இந்தநிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பொங்கல் விடுமுறை காரணமாக திருப்பூரில் பணியாற்றி வரும் நெல்லை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முதலே மூட்டை முடிச்சுகளுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இன்று முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கோவில் வழி, யூனிவர்சல் தியேட்டர் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
Tags:    

Similar News