செய்திகள்
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்

சச்சின் பைலட் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் வீடியோவை வெளியிட்டார்

Published On 2020-07-14 01:44 GMT   |   Update On 2020-07-14 01:44 GMT
ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிக்கு மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை அவமானப்படுத்துவதற்காகவே இந்த நோட்டீசை அனுப்ப வைத்ததாக சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். மேலும் கெலாட்டின் தலைமையின் கீழ் இனிமேல் இயங்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறினர்.

இதன் தொடர்ச்சியாக தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது. எனினும் பைலட்டின் அறிவிப்பால் முதல்-மந்திரிக்கும், துணை முதல்-மந்திரிக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்கள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்புக்காக குதிரை பேரம் நடப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டசபைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் 106 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள்  ஆதரவு இருப்பதை நிரூபிக்க  அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பைலட் வீடியோவில் காணப்படவில்லை என்றாலும், சில எம்.எல்.ஏக்கள் கேமராவை நோக்கி பேசுவதை  காணலாம். வீடியோ எடுக்கப்பட இடத்தை வெளியிடவில்லை.
Tags:    

Similar News