செய்திகள்
தானப்பகவுண்டர் மெட்ரிக் பள்ளி சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், இயக்குனர்கள் சரவணகுமார், ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ரகீப்அகமது வரவேற்று பேசினார். விழாவையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள் தலைகவசம் அணிந்து சாலைவிதிகளை முறையாக பின்பற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஊர்வலம் காரிமங்கலம் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாக அலுவலர் தனபால் நன்றி கூறினார்.