ஆன்மிகம்
சரஸ்வதி

கல்வி மேன்மை தரும் கலைமகள் ஆலயங்கள்

Published On 2019-11-04 09:11 GMT   |   Update On 2019-11-04 09:11 GMT
கல்வியில் மாணவ, மாணவிகள் சிறப்பு பெற வழிபட வேண்டிய பெண் தேவதைகள் நமது ஆன்மிக பண்பாட்டில் பல நிலைகளில் உள்ளனர். அவை பற்றி ஆன்மிக சான்றோர்கள் அளித்த தகவல்களை இங்கே காணலாம்.
கல்வியில் நாட்டம், புத்திக்கூர்மை, திறமையான பேச்சு, சொல் வன்மை, கலைகளில் வெற்றி ஆகியவற்றை அடைய அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு வித்யா வடிவமாக உள்ள பெண் தேவதைகளை வணங்குவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் உறுதியான கருத்தாகும். கல்வியில் மாணவ, மாணவிகள் சிறப்பு பெற வழிபட வேண்டிய பெண் தேவதைகள் நமது ஆன்மிக பண்பாட்டில் பல நிலைகளில் உள்ளனர். அவை பற்றி ஆன்மிக சான்றோர்கள் அளித்த தகவல்களை இங்கே காணலாம்.

நான்கு வித வாக்குகள்

உலகம் தோன்றிய போது முதலில் எழுந்த ஓசைக்கு ‘ஓம்’ என்று பெயர். இந்த ஓம்கார ஒலியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓம்கார ஒலியே பிரதானமாகும். இந்த முதல் ஒலிதான் நித்தியவாக்கு எனவும், என்றும் அழியாத மொழி எனவும் சொல்லப்படுகிறது. நான்கு நிலைகள் கொண்ட இந்த வாக்குதான் மனிதர்கள் பேசுகிற மொழி ஆகும். மற்ற மூன்று நிலைகளும் நரம்பு மண்டலத்தினுள் மறைந்து கிடப்பதாக தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவற்றில், முதலாவது மூலாதாரச் சக்கரத்தில் உருவாகும் பரா வாக்கு, இரண்டாவது வயிற்றுப் பகுதியில் விரிவடையும் பச்யந்தி வாக்கு, மூன்றாவது இடைப்பகுதிக்கு மேல் உருவாகி நிற்கும் மத்யமா வாக்கு, நான்காவது வெளியில் உருப்பெற்று வரக்கூடிய வைகரி வாக்கு ஆகும். இந்த நான்கு நிலைகளும் மேம்பட இங்கு நாம் பார்க்க உள்ள பெண் தேவதைகள் அருள் புரிகிறார்கள் என்பது ஆன்மிக நியதியாகும்.

மகத்தான மாதங்கி

சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைந்திருக்க, அழகாக அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.

கபால கிண்ண கலைமகள்

சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள பெரியபாளையத்தில் ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக வீற்றிருக்கிறாள். ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவார்த்தம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை. பக்தர்கள் ஞானம், கல்வி ஆகியவற்றை வேண்டி வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

ஞான சரஸ்வதியின் திருவருள்


திருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் உள்ள தலத்தில் ஈசன் பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்றதால் பிச்சாண்டார் கோவில் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

ஞானம் தரும் பிரம்ம வித்யாம்பிகை


திருவெண்காடு தலத்தில் மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரர் மற்றும் அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை ஆகியோர் அருள் செய்கிறார்கள். அம்பாள் அங்கே சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இக்கோவில் கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

பேசும் திறம் அருளும் பேச்சியம்மன்

சரஸ்வதி என்ற வித்யா அம்சமாக கிராமக் கோவில்களில் பேச்சியம்மன் அருள்புரிவதை பலரும் பார்த்திருப்போம். பேச்சு+ஆயி என்பதே பேச்சாயி என்று சொல்லப்படும். பேச்சுத்திறன் குறைந்தவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு, குறைகள் தீர்ந்து பேச்சு திறம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. மதுரை பேச்சியம்மன் கோவில் பிரபலமானது. தமிழகத்தின் பல கிராமங்களில் பேச்சியம்மனுக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

கல்விக்கு அன்னை

திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கி.மீ. தொலைவில் சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கும் தாடிக்கொம்பு தலம் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவமிருந்த இடமாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஞானவாணி அளிக்கும் கல்வி வரம்


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ள திருக்கண்டியூர் தல ஈஸ்வரன் பிரம்ம சிரகண்டீசர் ஆவார். இங்கு பிரம்மாவுக்கு தனிக்கோவில் உண்டு. அற்புதச் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி தனது கணவனோடு, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் தரும் ஞான வாணியாக அருள்பாலிக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியைச் செலுத்தி கலைச்செல்வம் வழங்கும் வெள்ளாடை நாயகி மற்றும் பிரம்மனை தரிசிப்பது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனி சன்னிதியும் அமைந்துள்ளது.

ஞான மயமான வேத சரஸ்வதி

நான்கு வேதங்களும் இத்தலத்து ஈஸ்வரனை வணங்கியதாக ஐதீகம். இக்கோவிலின் பிரகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதை குறிக்கும் வகையில் சரஸ்வதிக்கு வீணை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News