ஆன்மிகம்
அத்திவரதர்

அத்தி வரதர் மீண்டும் 2059-ம் ஆண்டு தான் காட்சி தருவார்

Published On 2019-07-01 08:07 GMT   |   Update On 2019-07-01 08:07 GMT
இன்று முதல் காட்சி தரும் அத்தி வரதர் ஆகஸ்டு 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.
வசந்த மண்டபத்தில் இருந்து இன்று முதல் காட்சி தரும் ஆதி அத்தி வரதர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்படுவார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.

இதற்கு முன்பு 1854-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி, 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் 40 ஆண்டுகள் இடைவெளி என்பது சரியாக பின்பற்றப்படவில்லை.

1937-ம் ஆண்டுக்கு பிறகு 1977-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்துள்ளது. எனவே, அந்தப் பணி முடிந்ததும் 1978-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி தான் (அதாவது 42 ஆண்டுகள் கழித்து) ஆதி அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். தற்போது, சரியாக 40 ஆண்டுகளில் மீண்டும் அவர் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News