செய்திகள்
மாவு பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்குகள் பாதிப்பு
விவசாயிகள் தலைப்புகையிலையை தயிர் மற்றும் வேப்ப எண்ணையில் கலந்து ஊறவைத்து அதை செடியில் தெளித்து மாவுப்பூச்சி தாக்குதலை குறைத்து வருகின்றனர்.
வெள்ளகோவில்;
வெள்ளகோவில், முத்தூர் அருகே வாய்க்கால் மேட்டுப்புதூர், காங்கயம்பாளையம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாவு பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்குகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி மருந்தை தெளித்தும் கட்டுக்குள் வரவில்லை. இலையில் வெண்படலம், ஓட்டை விழுந்து, பச்சையம் நீங்கி கருகி மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
சில விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பகுதியில் உள்ள அனைத்து மரவள்ளிக்கிழங்கு செடிகளையும் முற்றிலும் அழித்துவிட்டு மீண்டும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளனர்.
விவசாயிகள் தலைப்புகையிலையை தயிர் மற்றும் வேப்ப எண்ணையில் கலந்து ஊறவைத்து அதை செடியில் தெளித்து மாவுப்பூச்சி தாக்குதலை குறைத்து வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சர்மிளாவிடம் கேட்டபோது:
மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வெள்ளகோவில் மற்றும் முத்தூர் தோட்டக்கலை துறை அதிகாரிகளை நேரில் தொடர்பு கொள்ளலாம். பரிந்துரை செய்யும் மருந்துகளை கலந்து தெளித்தால் முற்றிலும் அழிக்கலாம். மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உட்பட்ட கரணையை மீண்டும் நட்டு உபயோகப்படுத்தக் கூடாது என்றார்.