செய்திகள்
சோனியா காந்தி மற்றும் சரத் பவார்

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி: சோனியா-சரத் பவார் சந்திப்பு திடீர் ரத்து

Published On 2019-11-16 16:09 GMT   |   Update On 2019-11-16 16:09 GMT
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் சரத் பவார் இடையே நாளை நடைபெற இருந்த சந்திப்பு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது அனைவரும் ஏற்கும் வகையிலான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இதைதொடர்ந்து, கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் சரத் பவார் இரு தலைவர்களும் நாளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில், நாளை நடைபெற இருந்த இரு தலைவர்களின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டு நாளை மறுநாள் (திங்கள் கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைக்கவுள்ள கூட்டணி ஆட்சியில் முதல் மந்திரி பதவி சிவசேனாவுக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News