செய்திகள்
பல்லடத்தில் மழைநீர் வடிகால்களில் தூய்மைப்பணி தொடக்கம்
வடகிழக்கு பருவ மழையினால் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள், நீரோடைகளை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் தொடங்கியது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர் வர உள்ள வடகிழக்கு பருவ மழையினால் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அரசின் உத்தரவுப்படி பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இதற்காக நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணி நடைபெறும்.
மேலும் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பணியாளர்கள், மேற்கொள்ள உள்ளனர்.
எனவே மழைநீர் வடிகால்கள், நீரோடைகள், கழிவு நீர் கால்வாய்கள் அருகே பொதுமக்கள் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் வைத்திருந்தால் அவர்கள் உடனடியாக அகற்றி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.