செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே விவசாயிகள் சாலை மறியல்

Published On 2021-01-12 12:37 GMT   |   Update On 2021-01-12 12:37 GMT
உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்துக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யும் உளுந்தை உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த உளுந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்து ரூ.3,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த வாரம் ஒரு மூட்டை உளுந்து ரூ.8 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,500-க்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உளுந்துக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்யும்படி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் போராட்டம் அறவழியில் இருக்க வேண்டும். சாலை மறியல் செய்வது சட்டப்படி குற்றம் என தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மற்றும் வியாபாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கொண்டு வந்துள்ள உளுந்து மூட்டைகளை விற்பனை கூடத்தில் வைத்துவிட்டு மீண்டும் நாளை(இன்று) மறு ஏலம் நடத்தி அதில் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுஅங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News