பொது மருத்துவம்
பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2022-02-28 04:20 GMT   |   Update On 2022-02-28 04:20 GMT
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களைப் பார்த்து, அவை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ளலாம். அத்தகைய பொருட்கள் பற்றிய பட்டியல் இது.
பிஸ்கட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதல் தரும் என்று உணவியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அவற்றை சார்ந்திருக்கும் நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. கார்ன் பிளேக்ஸ், ஓட்ஸ், நார்ச்சத்துள்ள பிஸ்கட், வேர்க்கடலை, வெண்ணெய், பிரவுன் ரொட்டி உள்பட பல்வேறு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்ட நிலையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பேக்கிங் லேபிள் மீதும் அதில் உள்ள பொருட்களின் ஊட்டச்சத்து அளவுகள் கிராம் வடிவில் இடம்பெற்றிருக்கும். அதில் என்னென்ன பொருட்கள், எந்தெந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களைப் பார்த்து, அவை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ளலாம். அத்தகைய பொருட்கள் பற்றிய பட்டியல் இது.

1. சர்க்கரை:

இது, சுவைக்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பொருளை வாங்கும் போது,​அதில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும். சில உணவு பொருட்களில், சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு வெளிப்படையாக தெரியாது. தேன் மற்றும் வெல்லம் வடிவில் சேர்க்கப்படும் சர்க்கரை சுத்தமானது. ஆரோக்கியமானது.

2. உப்பு:

சர்க்கரையைப் போலவே, உப்பு சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த உணவு பொருட்களில் கலந்திருக்கும் உப்பின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக சோடியம் எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை சரி பார்க்க வேண்டும். ஏனென்றால், நாள் முழுவதும், பல்வேறு அளவுகளில் உப்பு உள்ளடக்கம் கொண்ட பல உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம்.

நாளடைவில் அதில் கலந்திருக்கும் சோடியம் உடலில் சேர்ந்துவிடும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மேலும் கல் உப்பு, இமயமலை சிவப்பு உப்பு, அயோடின் கலந்த உப்பு என உப்பில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு நன்மை மட்டுமல்ல தீமையும் தரக்கூடியவை. எனவே உப்பு கலந்த உணவு பொருட்களை வாங்கும்போது கவனமாக செயல்பட வேண்டும்.

3. தானியங்கள்:

இவை நார்ச்சத்து மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரவை மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் உள்ளடங்கி இருக்கும் பொருட்கள் பற்றி சரியாக குறிப்பிடப்பட்டிருக்காது. முழு தானியங்களை பொறுத்தவரை நார்ச்சத்து அதிகம் கொண்டவையாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். மாவு பொருட்களுக்கும் இது பொருந்தும். ‘மல்டிகிரேன் மாவு’ என்று குறிப்பிடப்பட்டால், அதில் முழு தானியங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறிவிட முடியாது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரிபார்க்க வேண்டும்.

4. கொழுப்பு:

இதுவும் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களில் உள்ளடங்கி இருக்கும் கொழுப்புகள் ஆரோக்கியமானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருக்கலாம். எனவே, அது எந்த வகையான கொழுப்பை கொண்டுள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சில உணவு பொருட்களில் கொழுப்புகள் பதப்படுத்தப்படுகின்றன. அவை பயன்படுத்த எளிதானது. மற்றும் நீண்ட காலம் கெட்டுக்போகாது. அதனை நீண்ட காலத்திற்கு உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது.

5. செயற்கை வண்ணங்கள்:

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் முன் அதில் இடம்பெற்றிருக்கும் லேபிளை நன்றாக படித்து பார்க்க வேண்டும். செயற்கை வண்ணங்களை பொறுத்தவரை அவை சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுகின்றன. பசியை சமாளிப்பதற்கும் வித்திடும். ருசியை மட்டுமே குறி வைத்து அந்த உணவு பொருள் தயாரிக்கப்பட்டிருக்கும். அதற்கு செயற்கை வண்ணங்கள் துணை புரியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உணவின் தரம் மிகவும் முக்கியமானது. சுவைக்காக அவற்றை நீண்ட காலம் உட்கொள்ளும் போது, புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுத்துவிடும். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்துவிடும்.

6. சாறுகள் (எக்ஸ்ட்ராக்ட்):

பொதுவாக சாறுகள் காய்கறிகள், பழங்களை செறிவூட்டி தயாரிக்கப்படும். இவையும் சுவை, நிறம், ஊட்டச்சத்து போன்ற விஷயங்களுக்காக சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் இந்த சாறுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

7. பேக்கிங் சோடா - பவுடர்:

பேக்கிங் சோடா, பவுடர் ஆகியவை கேக் மற்றும் குக்கீகள் வரை வேகவைத்த பொருட்களில் பிரதானமாக இடம்பெறுகின்றன. பஜ்ஜி, தோசை போன்றவற்றிலும் சேர்க்கப்படுகின்றன. இவை உணவுப் பொருட்களுக்கு மென்மை தன்மையை அளிக்கின்றன. இருப்பினும் இவற்றை அடிக்கடி உட்கொண்டால் இரைப்பை சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.

பேக்கிங் சோடா இதய ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் போது, இதில் என்ன இருக்கிறது என்பதை அறிய லேபிளை சரி பார்க்க வேண்டும்.
Tags:    

Similar News