உள்ளூர் செய்திகள்
பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த வெலிங்டன் செல்கிறார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை
குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் 11 பேருக்கும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெலிங்டன் செல்கிறார். காலை 11:00 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
தலைமுறை தலைமுறையாக இந்தியஇராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பிபின் ராவத் தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்தது என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மிகுந்த கவலையுடனும், வருத்தத்துடனும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தற்சமயம் வெலிங்டன் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அவரது இழப்பு இந்திய ராணுவத்திற்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.