செய்திகள்
வேளாங்கண்ணி அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி
வேளாங்கண்ணி அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலியானான். இதுதொடர்பாக போலீசார், கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி:
திருவாரூர் மகாராஜா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.
சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக சந்தோஷ் மீது மோதியது. இந்த விபத்தில் அவன் தூக்கி வீசப்பட்டான். இதனால் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை, போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.