புதுக்கோட்டையில் வீடு தேடி வந்த தங்கையின் காதலன் அடித்துக்கொலை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் நல்லையா (வயது 23). இவர் பிளஸ்-2 படித்து விட்டு கோவையில் உள்ள ஒரு பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சத்தால் தனது சொந்த ஊருக்கு வந்த வர் இங்கேயே தங்கி விட்டார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஜான்சி. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டிற்கும் தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் ஜான்சியும், நல்லையாவும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஜான்சியின் பெற்றோர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே பெங்ளூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜான்சியின் அண்ணன் பிரபு கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார்.
அவரிடம் பெற்றோர்கள் தங்கையின் காதலைப் பற்றி கூறியுள்ளனர். இதனைக் கேட்ட பிரபு, நல்லையாவை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் நல்லையா பிரபுவின் மிரட்டலுக்கு அஞ்சால் ஜான்சியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக ஜான்சியை தவிர வீட்டில் இருந்த அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த நல்லையா ஜான்சி வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்துள்ளனர். கோவிலுக்கு சென்றவர்கள் திருவிழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர்.
மாடியில் சிரிப்பு சத்தம் கேட்டதால் பிரபு அங்கு பார்த்தபோது, தங்கை ஜான்சியுடன் நல்லையா பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளார். பலமுறை கண்டித்தும் நீ என் தங்கையுடன் பழகுவதை நிறுத்த மாட்டாயா என்று ஆவேசமாக பிரபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரபு அருகில் கிடந்த கட்டையை எடுத்து நல்லையா தலையில் அடித்தார். இதில் நல்லையா படுகாயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த ஜான்சி கதறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து நல்லையா வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.
நல்லையாவின் பெற்றோர்கள் தங்கள் மகனை தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.