லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு புகையால் பெருகும் நிமோனியா

குழந்தைகளுக்கு புகையால் பெருகும் நிமோனியா

Published On 2020-12-21 04:14 GMT   |   Update On 2020-12-21 04:14 GMT
கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள்.
கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். இதுவும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவகால நோய் தொற்று வகையை சார்ந்தது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கைபடி, ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். நிமோனியா பல்வேறு வழிகளில் பரவக்கூடும். குறிப்பாக குழந்தைகளின் மூக்கு, தொண்டையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஊடுருவி மூச்சை உள் இழுக்கும்போது அவை நுரையீரலுக்குள் நுழைந்துவிடும். பின்னர் இருமல், தும்மல் போன்ற பாதிப்பை உண்டாக்கும்.

உடலில் குளிர்ச்சித்தன்மை, காய்ச்சல், மார்பு வலி, சளி, இருமல், சுவாசிப்பதற்கு சிரமம் அல்லது வேகமாக சுவாசிக்கும் நிலை, வழக்கத்தைவிட கடும் சோர்வு, வெறித்தனமான நடத்தை போன்றவை நிமோனியாவுக்கான பொதுவான அறிகுறிகளாகும். அவற்றை கவனத்தில் கொள்ளாவிட்டால் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

குழந்தைகளை தாக்கும் நிமோனியா மூன்று வகைப்படும். அவற்றுள் லேபார் நிமோனியா, நுரையீரலின் ஒரு பகுதியை பாதிக்கக்கூடும். மூச்சுக்குழாய் நிமோனியா எனும் இரண்டாவது வகை பாதிப்பு நேரும்போது குழந்தைகளின் இரு நுரையீரல்களிலும் தடிப்புகள் தோன்றும். ‘வால்கிங் நிமோனியா’ எனப்படும் மூன்றாவது வகை நிமோனியா குழந்தைகளுக்கு மந்தமான உணர்வை தோற்றுவிக்கும். தனி நபர் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிமோனியாவை தடுத்து நிறுத்திவிடலாம். குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்தும் காப்பாற்றிவிடலாம்.

குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். எங்கு சென்றாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆனதும் நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக போட வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக தடுப்பூசி போடலாம்.

இதுபற்றி டாக்டர் வயோம் அகர்வால் கூறுகையில், “குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் போட்டுவிட வேண்டும். அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். நிமோனியாவுக்கும் வழிவகுத்துவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். வைட்டமின் ஏ, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கேரட், பால் மற்றும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

நுரையீரலில் தொற்று, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் நிமோனியா பாதிப்பு உண்டாகும். நிலைமை மோசமடையாமல் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுவதுதான் புத்திசாலித்தனம். புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கிவைக்க வேண்டும்.

நிமோனியாவின் அறிகுறிகளை கொண்டவர்களுடன் குழந்தைகளை நெருங்கி பழக அனுமதிக்காதீர்கள். வீட்டின் தரைதளம் உள்பட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அல்லது கிருமிநாசினியால் துடைத்தெடுக்க வேண்டும். குழந்தைகளின் நகங்கள் நிறம் மாறுதல், உதடுகள் நீல நிறத்துக்கு மாறுதல், சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, 100 டிகிரிக்கும் அதிகமாக காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News