மொடக்குறிச்சி அருகே டிப்பர் லாரி மோதி மூதாட்டி பலி
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள குமாரவலசு பகுதியை சேர்ந்தவர் ஆரான் . இவரது மனைவி மாரத்தாள் (வயது 65). இவர்களுக்கு 3 மகளும், 1 மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மூதாட்டி மாரத்தாளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் மொடக்குறிச்சி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகின்றது.
இந்நிலையில் முதியோர் உதவி தொகை பணத்தை எடுக்க மூதாட்டி மாரத்தாள் மொடக்குறிச்சி நான்கு சாலையை கடந்து வங்கிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது முத்தூர் சாலையில் இருந்து பூந்துறை சாலைக்கு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது மாரத்தாள் சாலையை கடப்பதை கவனிக்காமல் டிப்பர் லாரி இடது புறமாக திருப்பியது. டிப்பர் லாரியின் முன் பகுதி மாரத்தாள் மீது மோதிய போது அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் மாரத்தாள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த மாரத்தாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மூதாட்டியின் மீது டிப்பர் லாரி மோதியதை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டு ஓடிவந்ததை கண்டு டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லாரியை சாலையில் விட்டு தப்பி ஓடினார்.
இந்த விபத்து தொடர்பாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரத்தாள் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லாரியை பறிமுதல் செய்த மொடக்குறிச்சி போலீசார் தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.