உள்ளூர் செய்திகள்
கேமரா

நெடுஞ்சாலைகளில் 50 சதவீத சி.சி.டி.வி. கேமராக்கள் பழுது- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-04-16 06:42 GMT   |   Update On 2022-04-16 06:42 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் பழுதாகி உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையான, திருவள்ளூர் - திருத்தணி, செங்குன்றம்- ஆரம்பாக்கம் சாலையிலும், திருவள்ளூர் - பூந்தமல்லி, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் - ஆவடி, திருவள்ளூர்-செங்குன்றம் மாநில நெடுஞ்சாலைகளிலும், அதிகளவில் சாலை விபத்துகள் மற்றும் வழிப்பறி கொள்ளை ரே‌ஷன் அரிசி கடத்தல் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி, பஸ், வேன், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் சென்று வருகின்றன. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு காயம், உயிர் பலி மற்றும் வழிப்பறியும் நடக்கின்றது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள 24 காவல் நிலையங்களில் போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்கவும் வங்கி, கடைகள், குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்க, 5,000க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்கள் பல சேதமடைந்து விட்டன. இதில் திருவள்ளூர் நகரில் உள்ள காமராஜர் சாலை சந்திப்பு, நேதாஜி சாலை - எம்.ஜி.ஆர்., சிலை, தேரடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேமராக்கள் பழுதடைந்து, தரையை நோக்கி, திரும்பி தொங்குகிறது.

இதனால், போக்குவரத்து விதிமீறல், விபத்து உள்ளிட்டவற்றை, சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய இயலவில்லை. தற்போது, மாவட்டத்தில், 50 சதவீதத்துக்கு மேல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பழுதாகி உள்ள இந்த சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News