செய்திகள்
காஷ்மீர் தேர்தல்

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவு

Published On 2020-11-28 14:24 GMT   |   Update On 2020-11-28 14:24 GMT
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. 

காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர் வருகை படிப்படியாக அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரத்தை ஜம்முகாஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா வெளியிட்டார்.

அதன்படி, ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில் ஜம்மு பிரிவில் 64.2 சதவிகித வாக்குகளும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News