முத்தியால்பேட்டையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி வீடு சூறை
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வாழைக்குளம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜன்பாபு. இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது25). இவர் அலுமினியம் சேனல் செய்யும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது தெருமுனையில் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவா மற்றும் அவரது மகன்கள் பிரச்சினை செய்ததால் அவர்களிடம் சந்தோஷ்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத சிவா மற்றும் அவரது மகன்கள் லோகேஷ், சுரேஷ் மற்றும் இவரது நண்பர்கள் கூட்டமாக சந்தோஷ்குமாரின் வீட்டில் புகுந்து பீர்பாட்டிலால் குத்தினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.
அதோடு இனிமேல் எங்களிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து அவர் தன்னை தாக்கிய கும்பலுக்கு பயந்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததால் நடந்த சம்பவம் குறித்து சந்தோஷ்குமாரின் தாய் சாந்தி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா மற்றும் அவரது மகன்கள் லோகேஷ், சுரேஷ் மற்றும் இவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.