செய்திகள்

‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார்: பேச மாட்டார்’ - எல்.கே.சுதீஷ் தகவல்

Published On 2019-03-16 00:07 GMT   |   Update On 2019-03-16 00:07 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார் என துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். #DMDK
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது. இந்தநிலையில் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள் தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். இப்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.

விஜயகாந்த் இப்போதும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே, அவர் தொகுதி வாரியாக பிரசாரத்துக்கு வரும்போது, தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.

தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்

விஜயகாந்த் விரைவில் தீவிர கட்சி பணியை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர் தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் அவர் தான் இறுதி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth
Tags:    

Similar News