விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வீரபெருமாள்பட்டி கிராமம் அருகே, நேற்று இரவு 12 மணியளவில் இலுப்பூரிலிருந்து பரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரமாக இருந்த மரத்தில் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் டிரைவர் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் செல்வம் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தி அறிந்தவுடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும் நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.