செய்திகள்
மேற்கு வங்காளத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.5,552 கோடி முதலீடு- நிதி மந்திரி
மேற்கு வங்காளத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.5552 கோடி முதலீடு செய்யப்படும் என அம்மாநில நிதி மந்திரி அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ரா, “பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு, இரண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்த முட்டாள்தனமான செயல்களாகும். அதன் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் ஒப்பீடு அளவில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அளவு 12.58 சதவீதத்தை அடைந்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ.5552 கோடி தொழில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
இந்தியாவில் எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் மேற்கு வங்காள மாநிலம் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.