உள்ளூர் செய்திகள்
புதுவையில் 66 பேர் தொற்றால் பாதிப்பு- அதிகரிக்கும் கொரோனாவால் மக்கள் பீதி
புதுவையில் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 3 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 45, காரைக்காலில் 13, ஏனாமில் ஒருவர், மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 30, காரைக்காலில் 16, மாகியில் 4 பேர் என 50 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 4, காரைக்காலில் ஒருவர், மாகியில் 2 பேர் என 7 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 524 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 124, காரைக் காலில் 27, ஏனாமில் ஒருவர், மாகியில் 12 பேர் என 164 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 214 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது. புதுவையில் 2&வது தவணை உட்பட 14 லட்சத்து 10 ஆயிரத்து 815 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.