செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Published On 2021-10-11 07:27 GMT   |   Update On 2021-10-11 09:33 GMT
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சென்னை:

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூடுதல் செயலாளர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 3,506 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

3 நாட்களுக்கும் சேர்த்து சென்னையில் இருந்து 9,806 பஸ்கள், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து தினமும் இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,319 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள் விடப்படும். மொத்தம் 17,719 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்பட உள்ளன.

இது தவிர www.tnstc.in, www.tnstcofficialapp, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

மேலும் பஸ்களின் இயக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்படுகிறது. புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் தமிழகம் முழுவதும் 1,500 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை பாதிக்காத வகையில் வழக்கமான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 18004256151 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

இதுதவிர பஸ்நிலையங்களுக்கு வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்படும். சுங்கச்சாவடிகளில் பஸ்கள் காத்திருக்காமல் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மற்ற பஸ் நிலையங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணிநேரமும் இணைப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.



முன்பதிவு செய்யப்பட்டுள்ள பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளி சுற்றுசாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து தற்காலிக பேருந்து பஸ் நிறுத்தத்துக்கு செல்லும்.

தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் அங்கு சென்று பஸ்களில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்லாமல் திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News