உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

இலங்கை அரசை இந்தியா  கண்டிக்க  வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-01-17 05:22 GMT   |   Update On 2022-01-17 05:22 GMT
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை ஒப்படைக்கவும் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்டை நாடான இலங்கை அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற வேளையில், இலங்கையில் வாழும் மக்கள் நலன் காக்க இந்திய அரசு உதவிக்கரம் நீட்டுவது வரவேற்கத்தக்கது.

குறிப்பாக கொரோனா காலப் பாதிப்பால் இலங்கை நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகளுக்காக இலங்கைக்கு 1 கோடி டாலர் கடனுதவி அளிப்பது, இந்தியாவிடம் இருந்து 50 கோடி டாலர் எரிபொருள் இறக்குமதி செய்வது, ‘சார்க் கரன்சி’ பரிமாற்றத்திட்டப்படி, 40 கோடி டாலரை இலங்கைக்கு கடன் கொடுப்பது ஆகிய விவரங்கள் மனிதாபிமான அடிப்படையில் பேசப்பட்டது.

இத்தகைய நல்லெண்ண உறவை இலங்கை அரசுக்கு இந்தியா உணர்த்த வேண்டும். அதாவது இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் தாக்குவதால் மீன் பிடிச்சாதனங்களும், படகுகளும் சேதமுறுவதும், அவ்வப்போது மீனவர்கள் உயிரிழப்பதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை இந்திய அரசு கண்டிப்போடு இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News