ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்: இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசித்தனர்

Published On 2020-08-15 08:08 GMT   |   Update On 2020-08-15 08:08 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இணையதளம் மூலமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவையொட்டி கடைசி வெள்ளியன்று அம்மன் வீதிஉலா நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பாரம்பரிய முறைப்படி உற்சவர் அம்மன் வீதி உலா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும், இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மை செயலாளர் அறிவுரையின் படியும், திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி அன்று அம்மன் வீதி உலா நடைபெறவில்லை. கோவிலுக்கு வர பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆடி கடைசி வெள்ளியையொட்டி நேற்று கோவில் உற்சவர் அம்மன் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. மேலும் சிவாச்சாரியர்கள் மற்றும் ஓதுவார்கள் கொண்டு சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.

உற்சவர் அம்மன் அபிஷேக, ஆராதனைகள் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தரிசிக்கும் வகையில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் இணையதளம் வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அம்மனின் அபிஷேக, தீபாராதனை, சிறப்பு பூஜைகளை இணையதளம் வழியாக பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News