செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-08-01 08:14 GMT   |   Update On 2021-08-01 08:14 GMT
கேரளாவில் இருந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வருபவர்களை தீவிரமாக கண்காணிப்பது மிகவும் அவசியம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கூடிய கூட்டத்தை சுட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான் 12-07-2021 தேதியிட்ட எனது அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன்.

தற்போது இரண்டு, மூன்று நாட்களாக கொரோனா குறித்து வெளிவரும் அரசின் அறிக்கையினை பார்க்கும் போது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாதாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.

28-7-2021 அன்று 1,756 -ஆக இருந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 29-7-2021 அன்று 1,859 ஆகவும், 30-7-2021 அன்று 1,947 ஆகவும், 31-7-2021 அன்று 1,986 ஆகவும் உயர்ந்துள்ளது. 28-7-2021 அன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை 31-7-2021 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 230-வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தாலும், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தான் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான்.

இது மட்டுமல்லாமல், இன்னொன்றையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஜூலை 27-ந் தேதி அன்று 12 ஆயிரத்து 818 என்றிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை 31-ந் தேதியன்று 20 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 9 நாட்களில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட எட்டாயிரமாக உயர்ந்துள்ளது.

எனவே கேரளாவில் இருந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வருபவர்களை தீவிரமாக கண்காணிப்பது மிகவும் அவசியம்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதை முதல்- அமைச்சர் நன்கு அறிவார். ஜூலை 30-ந் தேதி அன்று முதல்- அமைச்சரால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டின் தலைப்பிலேயே ‘‘தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊடரங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு’’ என்றும், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும், அனைவரும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதையும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அளவுக்குதான் கடைக்குள் மக்கள் கூட்டம் இருக்கிறதா என்பதையும், இதே கட்டுப்பாடுகள் வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.

கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன என்ற தகவலும் வந்து கொண்டு இருக்கிறது.

எனவே, முதல்- அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்கப்படுவதை நூறு சதவீதம் உறுதி செய்து, மூன்றாவது அலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News