அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அரசே நேரடியாக வழங்கவேண்டும்- ஆர்பி உதயகுமார்
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் பேரையூர் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமங்கலம் மருத்துவ மனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை. அதேபோல் பேரையூர் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளேன்.
உயிர் காக்கும் மருந்தான ரெமிடெசிவிர் மருந்துகளை வாங்க செல்லும் மக்களை ஒழுங்கு படுத்த அரசு தவறிவிட்டது. இதனால் மக்கள் கொதிப்படைந்து மறியலில் ஈடுபட்டனர்.
ரெம்டெசிவிர் மருந்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கிடைக்க அரசே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து வழங்க வேண்டும். அப்படி செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாது.
தற்போது கொரோனா மற்றும் டவ்தே புயல் ஆகிய 2 பேரிடர்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களை காக்க வேண்டும்.
மக்கள் செத்து மடிவதை கண்டு அரசு சாக்கு போக்கு சொல்லாமல் விலை மதிக்க முடியாத மக்கள் உயிரைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.