செய்திகள்
கைது செய்யப்பட்ட சிவகுமார்

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவர் கைது

Published On 2019-11-15 12:28 GMT   |   Update On 2019-11-15 12:28 GMT
நடத்தையில் சந்தேகப்பட்டு திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பல்லாரிபாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது32).இவரது மனைவி தமிழ்செல்வி(27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அனுஷ்கா(8)என்ற மகளும், சைலேஷ்(6) என்ற மகனும் உள்ளனர். சிவகுமார் சென்னையில் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். தமிழ்செல்வி திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஜவுளிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்செல்வியின் நடத்தையில் சிவகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ் செல்விக்கும், சிவகுமாருக்கும், இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தார். அவர் தனது மனைவி எங்கு செல்கிறார் என கண்காணித்து வந்தார்.

நேற்று காலை தமிழ்செல்வி வழக்கம்போல் தான் வேலை பார்க்கும் ஜவுளி கடைக்கு சென்றார். இரவு 9 மணி அளவில் பணி முடிந்து தமிழ்செல்வி திருக்கோவிலூர் பஸ்நிலையம் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த சிவகுமார் தான் வைத்திருந்த பேனா கத்தியால் தமிழ்செல்வியை சரமாரியாக குத்தினார்.

கத்திகுத்தில் காயம் அடைந்த தமிழ் செல்வி கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு நின்ற பயணிகள் தப்பி ஓட முயன்ற சிவகுமாரை மடக்கி பிடித்தனர்.

அவரை பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய சிவகுமாரை கைது செய்தனர்.


கத்தி குத்தில் படுகாயம் அடைந்த தமிழ் செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நடத்தையில் சந்தேகப்பட்டு பஸ் நிலையத்தில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News