செய்திகள்

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கையை குறைத்து அறிவிக்கும் இலங்கை அரசு

Published On 2019-04-26 14:48 GMT   |   Update On 2019-04-26 14:48 GMT
ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்ததாக பல ஊடகங்கள் மதிப்பிட்ட நிலையில் 253 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆரம்பகட்டத்தில் 25 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

பின்னர், 100, 120, 220 என பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது. இறுதி நிலவரப்படி 11 இந்தியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பலியானதாக கூறப்பட்டது. மொத்தம் 359 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த செய்திகளை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் பிரசுரித்திருந்தன.

இந்நிலையில், இலங்கை அரசின் சுகாதாரத்துறை நிர்வாக இயக்குனர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-



குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்திரிகைகளில் வெளியானதுபோல 359 அல்ல. 253 பேர் தான் பலியாகி உள்ளனர். குண்டு வெடிப்பால் பல உடல்கள் மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை தவறாக வெளியாகி உள்ளது. தற்போது, அனைத்து பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் வந்த பின்னர், உண்மையான பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கூட ஒரு கணிப்புதான். பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் பலி எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்புக்கு இலங்கை மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற தகவல்கள் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடுகிறது என கருத்து தெரிவித்துள்ளனர். #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
Tags:    

Similar News