செய்திகள்
அத்வானி, ஜோஷி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

Published On 2020-09-30 03:23 GMT   |   Update On 2020-09-30 03:23 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நேரில் ஆஜராகமாட்டார்கள்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.  இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. இதையொட்டி குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

வயது முதிர்வு காரணமாக அத்வானி (92), முரளி மனோகர் ஜோஷி (86) ஆகியோர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உமாபாரதி, கல்யாண் சிங் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் காணொலி வாயிலாக ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News