செய்திகள்
9 யூனியன் அலுவலகங்களில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் - பா.ஜனதா அறிவிப்பு
வருகிற 2-ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள 9 யூனியன் அலுவலகங்கள் முன்பும் பா.ஜனதா கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் குடிநீர் வழங்கும் நோக்கில் வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகள் வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்ட பணிகளுக்கு தேவையான தொகையை மத்திய அரசு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கியுள்ளது. இதனை மறைத்து மத்திய அரசின் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கேட்கும் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.எனவே அப்படி பணம் வசூல் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும், அவ்வாறு விதிகளுக்கு முரணாக பொதுமக்களிடம் வசூலித்த தொகையை திரும்ப வழங்கக்கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள 9 யூனியன் அலுவலகங்கள் முன்பும் பா.ஜனதா கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.