செய்திகள்
கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு-எஸ்.பி.யிடம் புகார்
தனது பெயரில் போலி ‘பேஸ்புக்‘ கணக்கு துவங்கி வசூலில் ஈடுபட முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.,யிடம், திருப்பூர் கலெக்டர் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அரசு திட்டங்கள் கொரோனா தடுப்பு பணி, தடுப்பூசி குறித்து ‘பேஸ்புக்‘ உட்பட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் கலெக்டர் பெயரில் போலி ‘பேஸ் புக்‘ கணக்கு துவங்கி ‘நண்பரின் அவசர தேவைக்கு’ என்று கூறி பணம் வசூலிக்க முயற்சித்ததும், கலெக்டரின் ‘பேஸ் புக்‘ தொடர்பில் இருந்த சிலர் இதை நம்பி போலி கணக்கில், ‘சாட்டிங்’ செய்ததும், தற்போது தெரியவந்துள்ளது.
கூகுள் பே வாயிலாக ரூ. 15 ஆயிரம் அனுப்பி வையுங்கள். நாளை பணத்தை திருப்பி டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன் என்று ‘சாட்’ செய்து, ‘போலி கணக்கு’ ஆசாமி பணத்தை சுருட்ட முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிந்ததும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., செஷாங் சாயிடம் புகார் கொடுத்தார்.கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘எனது பெயரில் போலி ‘பேஸ்புக்‘ கணக்கு துவக்கி மர்மநபர்கள் பணம் வசூலிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து விரைவாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்,’’ என்றார். எஸ்.பி., செஷாங் சாய் கூறுகையில், போலி பேஸ்புக் ஐ.டி., கூகுள் பே எண் போன்றவை குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.