ஆன்மிகம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2019-10-29 03:47 GMT   |   Update On 2019-10-29 03:47 GMT
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாக போற்றப்படும் இக்கோவிலை, பக்தர்கள் குருபகவான் கோவில் என்று அழைக்கிறார்கள்.

இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை குருப்பெயர்ச்சி நடந்தபோது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.

அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் குரு கோஷங்களை எழுப்பி குருபகவானை தரிசனம் செய்தனர்.

ஏராளமானபக்தர்கள் இன்று அதிகாலை கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு குருபகவானுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகளை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிய நடந்தது.

குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 31-ந் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந் தேதி முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.
Tags:    

Similar News